துருக்கியில் புதிய சீர்திருத்த நடவடிக்கைகளை அந்நாட்டின் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் வெளியிட்டுள்ளார். அரசு அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு ஹிஜாப் அணிவதற்கான தடையை விலக்கி உத்தரவிட்டுள்ளார் எர்துகான். மேலும் குர்து இனத்தவர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஹிஜாப் அணிவதை தடுக்கும் சட்டத்தை நீக்குவோம் என்பது எர்துகானின் ஏ.கே. கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானதாகும்.
அதேவேளையில் நீதிமன்றங்கள் மற்றும் ராணுவத்தில் தற்போது அமலில் இருக்கும் ஹிஜாப் அணிவதற்கான தடையை தற்போது நீக்கவில்லை என்று எர்துகான் தெரிவித்துள்ளார். முஸ்தபா கமால் பாஷா துருக்கியில் தீவிர மதச்சார்பற்ற கொள்கைகளை அமல்படுத்தி உத்தரவிட்டதன் விளைவாக அங்கு இஸ்லாமிய கலாச்சார அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.
எர்துகான் தலைமையிலான ஏ.கே. கட்சியின் அரசு பதவி ஏற்றதில் இருந்து தீவிர மதசார்பற்ற கொள்கைகளின் பிடியில் இருந்து துருக்கியை கொஞ்சம், கொஞ்சமாக மீட்டு வருகிறது. குர்து இனத்தவர்களுக்கு அவர்களுடைய மொழியை படிக்க வாய்ப்பு வழங்கப்படும். குர்து பகுதிகளில் நகரங்களின் பெயர்களில் துருக்கி மொழிப் பெயர் மாற்றப்பட்டு உள்ளூர் மொழியை பயன்படுத்த அங்கீகாரம் வழங்குவோம் என்று எர்துகான் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் தங்களின் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப மொத்தம் 10 சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும் என்ற சட்டத்தை திருத்தவும் எர்துகான் அரசு தீர்மானித்துள்ளது. இந்த சட்ட திருத்தம் குர்து கட்சிகள் உள்பட சிறிய கட்சிகளுக்கு பலனளிக்கும்.

No comments:
Post a Comment