திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ளது ரிஷியூர் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் சோம.தமிழார்வன். இவருடைய கார் டிரைவர் பாலசுப்பிர மணியன். பாலசுப்பிர மணியன் மனைவி கஸ்தூரிக்கு சொந்தமான வீடு ரிஷியூரில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ந் தேதி இடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கஸ்தூரி கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 21ந் தேதி திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். அதில் வீடு இடிக்கப்பட்டதற்கு சசிகலாவின் தம்பி திவாகரன் உள்ளிட்டோர் காரணம் என்றும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் தம்பி திவாகரன், ரிஷியூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமேனன், தமிழ்ச்செல்வன், ராஜேந்திரன், வைத்தியநாதன், கணேசன், காந்தி என்கிற குணசேகரன், வீரசிவசங்கர், சக்தி ஆகிய 9 பேரை கைது செய்தனர். பின்னர் 9 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
வீடு இடிப்பு வழக்கு நீடாமங்கலம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நீடாமங்கலம் கோர்ட்டில் வழக்கு தொடர்பான விசாரணை நடந்தது.
விசாரணையில் சசிகலாவின் தம்பி திவாகரன், பொக்லைன் எந்திர உரிமையாளர் வீரசிவசங்கர் ஆகிய 2 பேர் மட்டுமே நேற்று ஆஜராகினர். பொக்லைன் எந்திர டிரைவர் சக்தி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகவில்லை. வழக்கில் தொடர்புடைய ரிஷியூர் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமேனன், தமிழ்ச்செல்வன், ராஜேந்திரன், வைத்தியநாதன், கணேசன், காந்தி என்கிற குணசேகரன் ஆகிய 6 பேரும் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆஜராகவில்லை.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் அடுத்த மாதம் (நவம்பர்) 7–ந் தேதி விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment