நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்துவருகிறது கம்யூனிஸ்ட் அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மருதையனிடம் கலந்துரையாடல்.
''மோடி, பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளர். நீங்களோ, அவரை 'கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆள்’ என்கிறீர்கள். எப்படி?
''அண்மையில், இந்தியாவின் டாப்-100 நிறுவனங்களின் சி.இ.ஓ-களிடம், 'எக்கனாமிக் டைம்ஸ்’ ஒரு சர்வே நடத்தியபோது, 'இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும்?’ என்ற கேள்வியை முன்வைத்தது. டாடா, அம்பானி, பிர்லா, மிட்டல், அடானி... உள்ளிட்ட பெரும் முதலாளிகள்தான் அந்த சர்வேயில் பங்குகொண்டவர்கள். அவர்களில் 74 சதவிகிதம் பேர் மோடி பிரதமராக வேண்டும் என்றே விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள். ராகுல்காந்தி உள்ளிட்டோருக்கு சேர்த்து 26 சதவிகிதம்தான்.
ஏன் அவர்கள் மோடியை விரும்புகின்றனர்? ஏனென்றால், மோடி குஜராத்தில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தை, விவசாயிகளிடம் இருந்தும், மீனவர்களிடம் இருந்தும் பிடுங்கி, இந்தப் பெரிய நிறுவனங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுத்திருக்கிறார். பல்லாயிரம் கோடி சலுகைகளை வரைமுறையின்றி வாரி வழங்கி இருக்கிறார். மோடி, மொத்த இந்தியாவுக்கும் பிரதமராக வந்தால் இந்தச் சுரண்டலை நாடு தழுவிய அளவில் செயல்படுத்தலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். மோடியை மாற்றத்தின் நாயகனாக அவர்கள் முன்னிறுத்துவதன் பின்னுள்ள அரசியல் இதுதான். மன்மோகன் சிங்கும் கார்ப்பரேட்டுகளுக்கு விசுவாசமானவர்தான் என்றபோதிலும், அவர் இப்போது செல்லாக் காசாகிவிட்டார். அந்தப் படம் இப்போது ஓடாது. ஆகவேதான் 'மோடி’ என்கிற புதிய ஹீரோவைக் களம் இறக்குகிறார்கள் கார்ப்பரேட்டுகள்.
மோடி எப்படிப்பட்டவர் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். டாடா நானோ தொழிற்சாலையை மேற்கு வங்கத்தில் இருந்து குஜராத்துக்கு அழைத்து வந்ததைப் பற்றி மோடி குறிப்பிடும்போது, 'பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டை வெறும் ஒரு ரூபாய் செலவில் அழைத்து வந்தேன்’ என்பார். அதாவது, இவர் டாடாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அவர் குஜராத் வந்துவிட்டார். அந்த 'ஒரு ரூபாய் செலவின்’ உண்மை முகம் என்ன? 1,100 ஏக்கர் நிலத்தை சந்தை விலையைவிட 100 மடங்கு குறைவான விலையில் டாடாவுக்குக் கொடுத்தார் மோடி. 2,900 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டுக்கு 9,570 கோடி ரூபாய் கடன் கொடுத்தார். அதற்கு வெறும் 0.1 சதவிகிதம்தான் வட்டி. கடனை 20 ஆண்டுகள் கழித்து திருப்பிச் செலுத்தினால் போதும். இது எந்த ஊரிலாவது நடக்குமா? மோடி பிரதமராவதில் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், முரளி மனோகர் ஜோஷி போன்ற பா.ஜ.க. தலைவர்களிடம் மாற்றுக் கருத்து இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களோ ஒருமித்த குரலில் மோடியை ஆதரிக்கின்றன.
அதேபோல, வெளிநாட்டு முதலீடுகள் குஜராத்தில் அதிகம் என்ற சித்திரம், திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஏனெனில், மற்ற மாநிலங்களில் பெயரளவுக்கு உள்ள சம்பிரதாயங்கள்கூட குஜராத்தில் கிடையாது. '1000 கோடி ரூபாய் கான்ட்ராக்ட்டை ஆன்லைனிலேயே முடித்தோம்’ என்று அவர்கள் பெருமையுடன் சொல்வது இதைத்தான். இப்படிப்பட்ட மாநிலத்தை எந்த முதலாளிக்குத்தான் பிடிக்காது? சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones) இந்தியாவில் இருப்பது நமக்குத் தெரியும். குஜராத்தில் மட்டும்தான், சிறப்பு முதலீட்டு மண்டலங்கள் (Special Investment Zones)இருக்கின்றன. அதுபோலவே, மோடியை 'சிறந்த நிர்வாகி’ என்கிறார்கள். இந்தியாவின் எந்த மாநிலத்திலாவது ஐ.ஜி., டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் சிறைக்குள் இருக்கிறார்களா? ஆனால், குஜராத்தில் 32 பேர் இருக்கிறார்கள். அனைவரும் 2002 -ம் ஆண்டு குஜராத் இனப் படுகொலைகளைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போலி மோதல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள். இத்தனை அதிகாரிகளே சிறையில் இருந்தால், அப்புறம் அது என்ன சிறந்த நிர்வாகம்?''

''குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து என்ன சொல்வீர்கள்?''
''மோடியின் வளர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்களுக்கு புள்ளிவிவரங்கள் குறித்து அக்கறை இல்லை. அவர்கள் துணிந்து பொய்களைப் பரப்புகின்றனர். அல்லது 'மின்சார உற்பத்தியில் குஜராத் தன்னிறைவு பெற்றுவிட்டது’ என்கிறார்கள். 'என்ன விலை கொடுத்தாலும் தங்கு தடையற்ற மின்சாரம் வேண்டும்’ என்பது எந்த வர்க்கத்தின் கோரிக்கை? அது செலவு செய்ய முடிபவர்களின் குரல். பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கணித்து, சில நூறு முதலாளிகள் மட்டுமே லாபம் அடைவதற்குப் பெயர் 'வளர்ச்சி’ அல்ல. லாபத்தை மட்டுமே அளவுகோலாகக் கருத, மோடி நடத்துவது மளிகைக்கடையும் அல்ல!''
''புள்ளிவிவரங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். மோடிக்கு என இந்தியா முழுக்க ஒரு இமேஜ் உருவாகியிருப்பது பொய் இல்லை. அதற்கு உங்கள் பதில் என்ன?''
''மோடியைச் சுற்றி எழுப்பப்படும் இந்த பிம்பம் எதேச்சையாக வந்தது அல்ல. அமெரிக்காவில் உள்ள ஆப்கோ வேர்ல்டு வைடு (Apco World wide)என்ற மக்கள் தொடர்பு நிறுவனம், மோடியைப் பிரபலப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இன்று மோடி ஒரு பெரிய பிராண்ட் ஆக நிறுவப்பட்டிருப்பதன் பின்னே, இந்த நிறுவனத்தின் 'லாபி’ உள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை குஜராத்தை நோக்கி ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள 'துடிப்பான குஜராத்’ (Vibrant Gujarat) என்ற திட்டத்தை, உலகளவில் மார்க்கெட் செய்வது இந்த நிறுவனம்தான். ஊடகச் செய்திகள், வெளிநாட்டு முதலாளிகள் மற்றும் தூதுவர்களின் குஜராத் வருகை எல்லாவற்றுக்கும் பின்னால், இந்த நிறுவனத்தின் லாபி இருக்கிறது. மோடி எப்படி ஆடை அணிய வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்?.. என்பன ஒரு திரைக்கதையைப் போல முன்பே தயாரிக்கப்படுகிறது. மன்மோகன் சிங்கை UNDERACHIEVER என்று வர்ணித்த அமெரிக்காவின் 'டைம்’ பத்திரிகை, மோடியை MODI MEANS BUSINESS என்று அட்டைப் படத்தில் வெளியிட்டது. இவற்றை இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, நரேந்திர மோடி பற்றி இன்று உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் அசலானது அல்ல. அது ஒரு பொய்த் தோற்றம்; அது ஒரு மோசடி!''
''சரி... உங்களைப் போன்றோரின் பிரசாரங்களையும் மீறி மோடி பிரதமர் ஆகிவிட்டால்..?''
''எந்தக் காரணத்தால் மோடி குஜராத்தில் வெற்றி பெற்றாரோ, அதே காரணத்தால் அவரால் இந்தியாவில் வெற்றிபெற முடியாது. இந்து மதவெறி, முஸ்லீம் எதிர்ப்பு... என்ற அவரது குஜராத் ஃபார்முலா, தேசிய அளவில் உதவாது. 'மோடி மேனியா’ என்பது, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திடம் மட்டும்தான் இருக்கிறது. நகர்ப்புற உழைக்கும் வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களிடம் இது எடுபடவில்லை. ஆக, தனிப் பெரும்பான்மை என்பதை பா.ஜ.க-வால் கனவிலும் நினைக்க முடியாது. கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றால், அதற்கு நரேந்திர மோடிதான் வில்லன். ஆகவே, மோடியின் பிரதமர் கனவு நிறைவேறும் வாய்ப்பு மிகவும் குறைவு. இது நிறைவேற வேண்டுமெனில், மிகக் கேவலமான சந்தர்ப்பவாதிகளாக மற்ற அரசியல் கட்சிகள் மாற வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது!''
ஆதாரம்!
நரேந்திர மோடியின் உண்மை நிலை குறித்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரபூர்வமான அறிவிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன், இதற்கு முன் பிரதமரின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தார். அப்போது ரகுராம் ராஜன் தலைமையிலான நிபுணர்கள் குழு, இந்திய மாநிலங்களின் வளர்ச்சிகுறித்து ஆய்வு செய்தது. சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தக் குழுவின் அறிக்கையில், வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் பட்டியலில்... கோவா, கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், மஹாராஷ்டிரா, உத்தர்காண்ட், அரியானா... ஆகிய ஏழு மாநிலங்கள் உள்ளன. மிகவும் பின் தங்கிய மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட 10 மாநிலங்கள் உள்ளன. பின்தங்கிய மாநிலங்களில் மேற்கு வங்கம், மணிப்பூர், நாகாலாந்து ஆகியவற்றோடு குஜராத்தும் இடம் பிடித்துள்ளது!


No comments:
Post a Comment