சென்னை: சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன் காவல்துறையினரிடம் பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர - தமிழக எல்லை அருகே வைத்து போலீஸ் பக்ருதீனை தமிழக காவல்துறையினர் பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் சேலத்தில் கடந்த ஜுலை மாதம் 19 ஆம் தேதி 3 பேர் கோண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்குகளில் விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழு அமைக்க, முதல்வர் ஜெயலலிதா, உத்தரவு பிறப்பித்தார். எஸ்.ஐ.டி., - ஐ.ஜி., மஞ்சுநாதா தலைமையில், எஸ்.பி., அன்பு, நான்கு டி.எஸ்.பி.,க்கள், எட்டு இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம், 30 பேர் கொண்ட குழு சேலம் வந்து விசாரணையை துவக்கியது.
இக்கொலை தொடர்பாக, மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில், நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோரை, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தனர்.
இவர்களை பற்றி தகவல் தருபவர்களுக்கு, ஒரு நபருக்கு, 5 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம், 20 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் எனவும் காவல்துறை அறிவித்தது.
இவர்களை தேடுவதற்காக, பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தகவல் கிடைக்கும் இடங்களில் சோதனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே, தற்போது போலீஸ் பக்ருதீன் பிடிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment