பகீரதப் பிரயத்தனம் என்பார்களே அதுபோல மோடியின் விசுவாசிகள் பலரும் பலவிதத்தில் முயற்சித்தும் மோடிக்கு அமெரிக்க விசா கிடைத்த பாடில்லை. எப்படியாவது அமெரிக்க விசாவைப் பெற்று ஒருமுறையாவது அங்கே சென்று வந்துவிட்டால் மோடியை சர்வதேச தலைவராக தலையில் தூக்கி வைத்து கொண்டாட சங்க பரிவார அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்க அரசாங்கம் மோடிக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. மோடிக்கு விசா வழங்கும் கொள்கையில் மாற்றம் இல்லை என்று இப்போது பகிரங்கமாக அறிவித்தும் விட்டது. மோடியை ஆஹா ஓஹோ என்று தூக்கிபிடிக்கும் இந்துத்துவவாதிகள் ஏமாற்றம் அடைந்து இருப்பது தெரிகிறது.
இவ்வளவு நடந்தும் கூட இந்தியாவின் பிரதமராக பி.ஜே.பி-யால் முன்னிறுத்தப் படும் மோடி இன்றுவரை அமெரிக்காவுக்கு எதிராக எந்தவித கருத்துக்களையும் சொல்ல வில்லை. அமெரிக்கா குறித்தும், தனக்கு விசா வழங்காமல் மறுத்து வருவது குறித்தும் ஏதாவது சொல்லப்போய், அது இன்னும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தின் காரணமாக ஒருவேளை மோடி சொல்லாமல் தவிக்ககூடும்.! வடிவேலு பாணியில் சொல்வதென்றால் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவன் என்று அமெரிக்கா நினைக்க வேண்டும் என்று மோடி மவுனம் சாதிக்கலாம் .
மோடியின் அடிபொடிகள்,ஆதரவாளர்களும் அமெரிக்கா என்றால் பேசாமல் வாயை மூடிகொள்வது ஏன் என்று புரியவில்லை. மோடிக்கு அமெரிக்கா செய்துவரும் அவமதிப்பை மோடியின் ஆதரவாளர்கள் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இந்திய ஊடகங்கள் கூட மோடியிடம் அமெரிக்கா பற்றி அவர் என்ன கருத்தை கொண்டிருக்கிறார் என்று கேட்காமல் இருந்து வருகின்றன.
போகட்டும் மோடியை அமெரிக்கா ஏன் நிராகரிக்கிறது? விசா வழங்க மறுக்கிறது ? அமெரிக்க ஒன்றும் குஜராத்தில் மோடி நடத்திய முஸ்லிம் இன அழிப்பை, மனித உரிமை மீறலை நினைத்து விசா வழங்க மறுத்து வரவில்லை. அமெரிக்க மோடிக்கு விசா வழங்காமல் உள்ளதற்கு அவ்வாறான காரணத்தை கூறினாலும் அது உண்மை இல்லை.!
சர்வதேச அளவில் முஸ்லிம்களை கொன்று குவித்து, முஸ்லிம் நாடுகளில் அக்கிரமங்களை, அராஜகங்களை செய்து வரும் அமெரிக்கா மோடியை தொடர்ந்து புறக்கணிக்க என்ன காரணம் இருக்க முடியும்? மோடி அமரிக்காவின் விருப்பப்படி நடந்து இந்தியாவில் அராஜகங்களை, படுகொலையை செய்யவில்லை.! தன்னிச்சையாக,தனது நலத்திற்க்காக, தன்னிச்சையாக, இந்துத்துவ பாசிசத்தின் ஆதிக்கத்திற்காக முஸ்லிம்களை கொன்றவர். மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தவர் என்பதும் தான் காரணமாகும்.
இழவு வீடானால் பிணமாக கிடைக்கணும், மண வீடானால் மாப்பிள்ளையாக இருக்கணும். முதல் மரியாதையும் மாலையும் தனக்குத்தான் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் அமெரிக்கா, அதையே நினைத்து மோடியும் செயல் படுவதை எப்படி ஏற்றுக்கொள்ளும்?
பாம்பின்கால் பாம்பறியும் ! மோடியைப் பற்றி அமெரிக்காவும், அமெரிக்காவைப் பற்றி மோடியும் புரிந்துகொண்டு இருப்பதால்தான் மோடி அமெரிக்கா விசயத்தில் மவுன சாமியாக வேசமிட்டு வருகிறார்.!
நன்றி : ஓசூர் ராஜன்


No comments:
Post a Comment