அமெரிக்க அதிபராக ஒபாமா 2–வது தடவை பதவி ஏற்றவுடன் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தார். அதற்கு 'ஒபாமா கேர்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஜனநாயக கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு பெருகிவிடும்.
இதன் மூலம் அடுத்த தேர்தலிலும் அக்கட்சியே ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உருவாகும். எனவே, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி தொடக்கத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்தது. மேலும் இத்திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்குவதால் மற்ற துறைகளுக்கு போதிய பணம் வழங்க முடியாது என்றும் கூறி வந்தது.
எனவே, மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியது. இதை காரணம் காட்டி வருகிற 2014–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற ஆதரவு தராமல் தடுத்துவிட்டது. இதனால் அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியவில்லை.
இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது உள்ளிட்ட அரசு பணிகள் முழுவதும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஆகவே அதை சமாளிக்க முதல் கட்டமாக அமெரிக்காவில் சில அரசு நிறுவனங்களை மூடியது. இதனால் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் நிலமை ஆட்டம் கண்டிருப்பதால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தொழிலில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் அஞ்சுகின்றனர்.
இதுதொடர்பாக, கருத்து கூறிய முன்னோடி ஐ.டி. நிறுவன அதிகாரி ஒருவர், இந்த தொழிலில் அமெரிக்காவுடனான இந்திய ஐ.டி. துறையின் பெரும்பாலான தொடர்புகள் தனியார் செலவினங்களை மையமாக கொண்டே இயங்குகின்றன. அமெரிக்க அரசுடன் வர்த்தக ரீதியாக எந்த நேரடி தொடர்பும் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு இல்லை.
இந்நிலையில், அமெரிக்க அரசில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை இந்தியாவில் உள்ள தகவல் தொழில் நுட்ப அவுட் சோர்சிங் தொழிலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment