ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆசிரமம் நடத்திவரும் ஆசாராம் பாபு (72) மீது கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரப்பிரதேச மாணவி பாலியல் புகார் கூறினார். இதையடுத்து ஆசாராம் பாபு கைதுசெய்யப்பட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அப்போது ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் அந்த இளம் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த அக்காள், தங்கை என இரு பெண்கள், ஆசிரமத்தில் தங்கியிருந்த போது ஆசாரம் பாபு மற்றும் அவர் மகன் நாராயண் சாய் இருவரும் தங்களை கெடுத்து விட்டதாக பாலியல் குற்றச்சாட்டை போலீசாரிடம் கூறினர்.
இதில் கடந்த 2002-2005ம் ஆண்டுகள் வரை சூரத் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது நாராயண் சாய் தன்னை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்று தங்கை கூறியுள்ளார். கடந்த 1997-2006ம் ஆண்டு வரை அகமதாபாத் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது ஆசாராம் பாபு தன்னை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அக்காள் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஆசாராம் மற்றும் அவரது மகன் மீது போலீசார் குற்றச்சாட்டு பதிந்துள்ளனர். இதனால், நாராயண் சாய் தலைமறைவாகினார். இதையடுத்து போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அந்த அறிக்கையை அனைத்து விமானநிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.
மேலும் நாராயண் சாய் போலீஸ் நிலையத்தில் வந்து விளக்கமளிக்க வேண்டி ஆசாராம் பாபு மற்றும் நாராயண் சாய் குஜராத்தில் நடத்தி வரும் ஆசிரமங்களுக்கு சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெஹாங்கிர்பூரா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கற்பழிப்பு குற்றச்சாட்டில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க உள்ளூர் நீதிமன்றத்தில் நாராயண் சாய் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment